அஷ்டாங்க யோகம்
டிசம்பர் 8, 2007 ஆல் Srikanth
பதஞ்சலி யோகம் என்றும் அஷ்டாங்க யோகம் என்றும் அழைக்கப்படும் யோக முறைகள் பதஞ்சலி என்ற முனிவரால் உருவாக்கப்பட்டவை. பழங்காலத்தில் பதஞ்சலி முனிவரின் தரிசனமாக (மதமாக) இவை கடைபிடிக்கப் பட்டிருக்கலாம். இந்த அஷ்டாங்க யோகம் என்பது எட்டு அங்கங்களை கொண்டது. அவற்றைப் பற்றி சிறு குறிப்பினை இப்பதிவில் காண்போம்.
अहिँसा सत्यास्तेय ब्रम्हचर्या परिग्रहा यमा:
அஷ்டாங்க யோகத்தில் முதலாவது யமம் - அஹிம்சை, சத்தியம், திருடாமல் பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல் இருத்தல், ப்ரம்மசர்யம், போகப்பொருள்களை தவிர்த்த நிலை ஆகியவை கொண்ட வாழ்வே “யமா” அல்லது யமம் எனப்படும்.
அடுத்தது நியமம்,
शौचसन्तोष्तप: स्वाध्यायेस्वरप्रणिधानानि नियमा:
தூய்மையாக இருத்தல், சுகம் துக்கம், பிடித்தது பிடிக்காதது என்று நேரும்போது அமைதியாய் நடுநிலையாய் இருத்தல், தவம், கற்றல், எல்லாவற்றையும் ஈஸ்வரனுக்கு அர்ப்பணித்து தன் கடமைகளை செய்தல் ஆகியவை நியமத்தில் அடங்கும்.
இதுவரை சொன்னவை வாழ்க்கைமுறை. இனி உள்ளத்துக்காக செய்யக்கூடிய த்யான முறையாவன,
स्थिरसुकमासनम्:
அசைவின்றி சுகமான வகையில் கஷ்டப்படுத்திக்கொள்ளாமல் அமரவேண்டும்.
तस्मिन् सति श्वासप्रश्वासयोर्गतिवेच्छेद: प्राणायाम:
ஆசனம் அமைந்தபிறகு, ப்ராணாயாமம் என்ற முறையில் சுவாசத்தை கட்டுப்படுத்துவது. சுவாசங்கள் பலவகைப்படும். அத்தகைய சுவாசங்களுக்கு கால அளவுகளும் உண்டு. முறையான வகையில் ப்ராணாயாமம் எப்படி செய்வது என்பது பற்றி வேறொரு பதிவில் பார்ப்போம்.
स्वविषयासम्प्रयोगे चित्तस्वरूपानुकार इवेन्द्रियाणां प्रत्याहार:
புலன்களை அடக்குதல், மனதை பழக்கி ஒருநிலை கொண்டு அதிலேயே அடங்கிவிடும் நிலை ப்ரத்யாஹாரம் எனப்படும்.
देशबन्धश्चित्तस्य धारणा:
ஒரு நேரத்தில் ஒரே பொருளில் மனதை லயிக்கவிடுவது, மற்ற எல்லா இடையூறுகளையும் விலக்கி ஏகாக்ர சிந்தை என்பதைப்போல் ஒன்றையே தொடர்ந்து சிந்தித்து மனதை நிலை நிறுத்தி வைத்தல் தாரணா எனப்படும்.
तत्र प्रत्ययैकतानता ध्यानम्:
தாரணா நிலையில் மனதை ஒருமைப்படுத்தி, பக்தியுடன் “தைலதாரை” என்ற எண்ணை கொட்டுவதைப்போல் இடைவிடாமல் தொடர்ந்து மனம் லயிப்பதே த்யானம் எனப்படும்.
இந்த அஷ்டாங்க யோகத்தின் கடைசி நிலை, சமாதி எனப்படும்.
तदेवार्थ मात्रनिर्भासं स्वरूपशून्यमिव समाधि :
எதை தாரணா மற்றும் த்யான நிலைகளில் மனதில் லயிக்க விடுகிறோமோ அதாகவே ஆகி இரண்டர கலந்து ஒன்றாகிவிடுதலே சமாதி எனப்படும் எட்டவது நிலையாகும். இதற்கு முந்தைய நிலைகளில் செய்பவர், செயல், அதன் விளைவு என்பது இருக்கிறது. ஆனால் சமாதி நிலையில் இவையெல்லாம் ஒன்றாக கலந்து விடுகின்றன.
(தத்வ விவேசனியை தழுவி எழுதப்பட்டது).
